search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஓட்டு"

    • காஞ்சன்பென் பாட்ஷா தனது பேரன்களுடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
    • காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார்.

    மும்பை:

    பாராளுமன்றத் தேர்தல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காஞ்சன்பென் பாட்ஷா என்ற 112 வயது மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும் நேரடியாக வந்து ஓட்டு போட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    1912-ம் ஆண்டு பிறந்த காஞ்சன்பென் பாட்ஷாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தற்போது அவர் இப்போது தனது 2 பேரன்களான பரிந்த் மற்றும் ஜிக்னேஷ் ஆகியோருடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.

    மும்பையில் மே 20-ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார். வயதாகிவிட்டாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த கால இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

    வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோடல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காஞ்சன்பென்னைப் பாராட்டி அவரை கவுரவித்தனர்.

    சுதந்திர போராட்டம், பிரிவினை, உலகப் போர்கள் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளைக்கண்ட அவர், இப்போது ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க இளைஞர்களை வலியுறுத்துகிறார்.

    நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    காஞ்சன்பென் குறித்து அவரது பேரன் பரிந்த் கூறியதாவது:-

    இந்த வயதில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்வது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் நம்புகிறார். வீட்டில் இருந்து வாக்களிப்பது யாருக்கும் பயனளிக்காது என்று கூறி நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்வதையே அவர் விரும்புகிறார். இந்த வயதிலும் வெளியே சென்று வாக்களிக்கும்போது அதை பார்க்கும் மற்றவர்களும் வாக்களிக்க நினைப்பார்கள். அதுதான் வாக்களிக்க வெளியே செல்வதற்கான அவரது முக்கிய நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
    • குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.

    இதனை பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் தபால் வாக்குகளை ஒப்படைத்தனர்.

    அதன் பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய வாக்குகள் அந்தந்த அலுவலர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் அதிகபட்சமாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 445 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 5031 வாக்குகள் பதிவாகின பெரம்பலூரில் இருந்து அதிகமாக வந்திருக்கிறது.

    அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து 2493 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 4117 தபால் வாக்குகள் பதிவாகின. அதில் 2674 வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு பதிவாகி இருந்தது.

    திருச்சிக்கு மட்டும் 1443 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்கினையும் பிற மாவட்டங்களில் திருச்சிக்கு பதிவான 5031 வாக்குகளையும் சேர்த்தால் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு 6474 தபால் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிற மாவட்டங்களில் இருந்து தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;-

    திருவள்ளூர்-4547, வடசென்னை-4023, மத்திய சென்னை -3,639, ஸ்ரீபெரும்புதூர்-3385, காஞ்சிபுரம் -949, அரக்கோணம் -926, வேலூர்-1863 கிருஷ்ணகிரி-6984 தருமபுரி-597 திருவண்ணாமலை-6551, அரணி-889, விழுப்புரம்-798 , கள்ளக்குறிச்சி-2243, சேலம்-4961, நாமக்கல்-1516 ஈரோடு-2908, திருப்பூர்-4947, நீலகிரி-1450, கோவை-4545, திண்டுக்கல்-1254 கரூர்-2970, பெரம்பலூர்-3028 கடலூர்-2322 சிதம்பரம்-2819 , மயிலாடுதுறை-1408 , நாகப்பட்டினம்-1814 தஞ்சாவூர்-1812 சிவகங்கை-3167 மதுரை-3552 , தேனி-500 , விருதுநகர்-2524 ராமநாதபுரம்-1948, தூத்துக்குடி-1667 தென்காசி-1879 திருநெல்வேலி-2303 கன்னியக்குமரி-434.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
    • மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

    வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.

    இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.


    இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.

    இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 90 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் நாளில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் போலீசாரால் வாக்குப் பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஓட்டு போட முடியாது என்பதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தபால் ஓட்டுகளை போட வசதி செய்து கொடுக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் 19 ஆயிரம் போலீசாரும் தபால் ஓட்டுகளை இன்று முதல் 3 நாட்கள் போடுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வடசென்னை தொகுதி வாக்காளர்களாக இருக்கும் போலீசார் வண்ணாரப்பேட்டை பேசின் பால சாலையில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் வசிக்கும் போலீசார் அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் போலீசார் செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள அலுவலகத்திலும் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்து கொண்டு சென்னையில் பணிபுரியும் போலீசாரும் தங்களது தொகுதி வேட்பாளர்களுக்காக ஓட்டு போடுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரையில் போலீசார் தபால் ஓட்டுகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே போலீசார் 3 மையங்களிலும் திரண்டு தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

    • முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
    • வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.

    அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (வயது 94) என்பவரது வீட்டிற்கும் நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் கொண்டு வந்த தபால் வாக்குப்பதிவு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில் நேற்று தாயம்மாள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
    • வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 100 வயது மூதாட்டி தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100). இவரது கணவர் ராயப்பன். அவர் இறந்துவிட்டார்.

    மூதாட்டி அஞ்சலை பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார். அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.

    அவர் 2-வது முறையாக தபால் ஓட்டு போட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    இதையொட்டி அவருக்கு வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நிகழ்ச்சியின் போது தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் தபால் வாக்கு பதிவு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.

    இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர்.
    • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12டி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தபால் ஓட்டு அளிக்க விருப்பத்தை தெரிவித்தார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர். 781 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் தபால் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தபால் வாக்கு பதிவு செய்ய தனியாக 110 குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வேட்பாளர்களின் முகவரும் இந்த குழுவினருடன் சென்ற னர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள். 600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய 78 குழுவினர் வீடு வீடாக செல்கின்றனர். இந்த குழு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். நாளையும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

    • மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி இன்று (4-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது.

    மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    அதன்படி தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்த திருச்சி சாலையில் வசித்து வரும் 86 வயதான முன்னாள் ஆசிரியை ஜெகதாம்பாள் தனது வாக்கினை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பதிவு செய்தார்.

    வீட்டில் இருந்தபடியே வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

    85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
    • அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

    அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

    முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.

    அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.

    தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • சென்னையில் 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
    • வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னையிலும் திங்கட்கிழமை தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.

    மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×